உலகெங்கும் வைகாசி விசாகம் கொண்டாட்டம்
தமிழர்களின் முதன்மை கடவுளாகவும், அழகு, ஆகியவற்றின் வடிவமாகவும் போற்றப்படுபவர், முருகப்பெருமான். இவர் கந்தன், கடம்பன், கார்த்திகேயன் என அன்போடு அழைக்க படுகிறார்,முருகப்பெருமான் அவதரித்த புண்ணிய நாளாக வைகாசி விசாகம் சிறப்பிக்கப்படுகிறது. வைகாசி மாதத்தில் பவுர்ணமியும் விசாக நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்னாளாகும்,அன்று முருகனை மனதார வேண்டி விரதம் இருந்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். மனகுழப்பங்கள் நீங்கி, நிம்மதி கிடைக்கும், வெற்றிகள் தேடி வரும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த நாளினை பக்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்
அறுபடை வீடுகளில் கொண்டாட்டம்
முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் வைகாசி விசாக விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முருகன் கோவில்களில் மகா உற்சவமும், முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும்
இந்த ஆண்டு வைகாசி விசாகம், வைகாசி மாதம் 16-ந் தேதியான மே 30 கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும், மகிழ்ச்சி நிலவும், எதிர்மறை சக்திகள் நீங்கும், சகல நன்மைகளும் வந்துசேரும்.

அறுபடை வீடுகளில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு
திருப்பரங்குன்றம் முதற்படையில்,மூலவருக்கும், வள்ளி-தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகங்களும், திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.
இரண்டாம்படை திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் முக்கிய தலம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, பால்குடம் எடுத்தும், காவடி ஆட்டம் மற்றும் பாதயாத்திரையாகவும் வந்து முருகனை வழிபடுவர்.
மூன்றாம்படை பழனி மலை மலைக்கோயிலில் மூலவர் தண்டாயுதபாணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும்
நான்காம்படை சுவாமி மலையில் முருகப்பெருமான் தகப்பனுக்கு சுவாமி உபதேசம் செய்த இத்தலத்தில், மூலவருக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஐந்தாம் படை திருத்தணியில் மலைப் பாதையில் முருகப்பெருமான் உலா வரும் கண்கொள்ளாக் காட்சி நடைபெறும்.
ஆறாம் படை பழமுதிர்சோலையில் இயற்கை எழில் கொஞ்சும் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகளும், மலைவாழ் மக்களின் வழிபாட்டு முறைகளும் மிகச் சிறப்பாக இடம்பெறும்.
வைகாசி விசாக வழிபாட்டு முறைகள் மற்றும் பரிகாரங்கள்
இந்த நாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, வீட்டைத் தூய்மை செய்து முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு மலர் சூட்டி, செவ்வரளி அல்லது சிவப்பு நிற மலர்கள் முருகனுக்கு மிகவும் உகந்தவை. பூஜையறையில் நெய் தீபம் ஏற்றி, முருகனின் அறுபடை வீடுகளை மனதார நினைத்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.
முருக பெருமானுக்கு நைவேத்தியமாக தினை மாவு மற்றும் தேன் அல்லது சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம்.
பூஜையின் இறுதியில் கற்பூர ஆரத்தி காட்டி, தாம்பூலம் வழங்கி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்

