செய்திகள்தேசியம்

பஜ்ரங் தள் இளைஞர் படுகொலையால் பதற்றம்..!! வாகனங்களுக்கு தீ வைத்து தாக்குதல்..!!

கர்நாடகாவில் பஜ்ரங்தள் பிரமுகர் கொலையால் ஏற்பட்ட கலவரத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததோடு, கடைகள், பஸ் மற்றும் கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கர்நாடக மாநிலம் சிவ்மோகா நகரை சேர்ந்த 24 வயதான ஹர்ஷா பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர் ஆவார். இவரை நேற்று இரவு சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் சிவ்மோகா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பதட்டத்தை தணிக்க சிவ்மோகா நகரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு, முக்கியமான பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை கொலையான ஹர்ஷாவின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அப்போது, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் சி.வி.நகர் பகுதியில் ஊர்வலம் சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென கடைகள், பேருந்து மற்றும் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் மோட்டார் சைக்கிள்களுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், சிவ்மோகா நகரில் மேலும் பதற்றம் அதிகரித்தது. பதற்றத்தை தணிக்க நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஹர்ஷா கொலையில் தொடர்புடைய 2 பேரை சிவ்மோகாவிலும், மங்களூரில் ஒருவரையும், பெங்களூருவில் இருவரையும் போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *