ஆன்மிகம்ஆலோசனை

கல்வி கலை, தொழில் வியாபாரம் வெற்றியடைய புதன் கிழமை விரதம்

புதன்கிழமை நவகிரகங்களில் புதன் வழிபடக் கூடிய நாள். புதன் பகவான் மனிதர்களுக்கு சுகபோகங்களை அளிக்கும் திருமால் அம்சம் கொண்டவராக இருப்பவர். புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வச் சேர்க்கை கிடைக்கப்பெறுவர்.

தொழில், வியாபாரத்திற்கு உரிய காரகனாக புதன் இருப்பதால் தொழில் வியாபாரம் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி புகழ் உண்டாகும். புதன் அறிவாற்றலுக்கு அதிபதி என்பதால் இவரை விரதம் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வி கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.

புதனுக்குரிய நிறம் பச்சை. இன்றைய தினம் சமையலில் பச்சை பயறை சமைப்பது நல்லது. பச்சை நிறம் கொண்ட காய்கறி, கீரைகளை சமைக்கலாம். புதன்கிழமை விரதம் இருப்பவர்கள் புதன்கிழமை விசாக நட்சத்திரத்தன்று புதன் விரதம் தொடங்கி 21 புதன்கிழமை இந்த விரதத்தை மேற்கொள்வது சிறப்பு. இன்றைய தினம் அதிகாலை எழுந்து குளித்து முடித்து உங்கள் வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து பீடத்திற்கு முன்பாக அரிசிமாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும்.

இக்கோலத்தின் நடுவில் கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். பீடத்தில் புத பகவானின் சிறிய படத்தை வைத்து அதற்கு வாசமுள்ள பூக்களை சாற்றி, புது பச்சை நிறத் துணியை வைத்து, பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியமாக வைக்கலாம். விரதம் மேற்கொள்பவர்களும் பச்சை நிற ஆடை அணிந்து நெய்தீபம் ஏற்றி சந்தன மணம் கொண்ட பத்திகளை கொளுத்தி புதன் பகவானுக்கு உரிய மந்திரங்கள் பாராயணம் செய்து புதன் பகவானுக்கு பூஜைகளை செய்து முடிக்க வேண்டும்.

புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்வது சிறப்பு. காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் பூஜை செய்து பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து ஒரு பிராமணருக்கு தானம் அளிப்பது மிகுந்த நன்மையை தரும்.

பச்சை நிற ஆடைகள், பச்சை நிற காய்கறிகள் தானம் அளிப்பது. உங்களின் புதன் கிரக தோஷங்கள் நீங்கி, புதன் பகவானின் ஆசிகளைப் பெற்றுத் தரும். இந்த தானத்தை புதன் கிழமை, புதன் ஓரையில் வழங்குவது மிகவும் விசேஷமானது. காலை 6 – 7 மதியம் 1-2 தானம் செய்ய ஏற்ற நேரம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *