ஆன்மிகம்

திருப்புகழ் பாடல் – 7 (திருப்பரங்குன்றம்)

பதினைந்தாம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்தவர் நம் அருணகிரிநாதர் இவர் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவர் இளம் வயதிலேயே தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு தனது இளம் வயதில் மிகமோசமாக எந்நேரமும் காமத்தில் மூழ்கி அதனால் தனது சொத்துக்களை இழந்து பெரும் நோயைப் பெற்று பின்பு இறந்து விட என்னும் தருவாயில் நமது முருகப் பெருமானின் அருளைப் பெற்று அவர் புகழ் பாடினார் இப்பாடலில் அவர் இளம் வயதில் செய்த தீய பழக்கங்களையும் முருகப்பெருமானின் புகழையும் எடுத்துப் பாடியுள்ளார்.

தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன …… தனதான

பாடல்

அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
     கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
         அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் …… இருதோளுற்

றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
     உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
         அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென …… மிகவாய்விட்

டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
     சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
         உறக்கை யின்கனி நிகரென இலகிய …… முலைமேல்வீழ்ந்

துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
     பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
         உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது …… தவிர்வேனோ

இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
     உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
         இதத்த இங்கிதம் இலகிய அறுமுக …… எழில்வேளென்

றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
     விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
         இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை …… புனைவோனே

செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
     நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
         திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய …… குருநாதர்

திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
     குருக்க ளின்திற மெனவரு பெரியவ
         திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.

பாடல் விளக்கவுரை

அருமை வாய்ந்த
விலைமாதர்களின் மலர் போன்ற அடிகளைப் பிடித்தும்,
அவர்களுடைய எண்ணம் எதுவென்பதை அறிந்த பின்பு இடுப்பில் கட்டிய
ஆடையை அவிழ்த்தும்,

அங்குள்ள அரசிலை போன்ற
உறுப்பைத் தடவியும், அவர்களுடைய இரண்டு தோள்களிலும் பொருந்தி
அணைத்தும், அங்கையின் அடிப்பாகம் தோறும் நகக் குறிகள் இட்டும்,
இதழ்களை மென்று பற்களால் பல குறிகள் பதித்தும்,

அடி(கீழ்) நெஞ்சில் மயில் குயில் புறா ஆகிய
இப் பறவைகள் போன்று பெரிய ஒலி எழச் செய்தும், உருக்க வல்ல
நெருப்பிலிட்ட மெழுகு போல உருகிய ஊக்கம் மிக்க அனுபவத்தால்
வருகின்ற பயன்களைப் பெற,

கையில் உள்ள பழம் போல் இருந்த தனங்களின் மீது
விழுந்து உருவம் கலங்கி உடல் உருகி, அமுதம் பெருகும் பெருத்த உந்தித்
தடத்தில் முழுகி, மெய் உணர்வு அற்றுப் போகும் வண்ணம் உழைக்கின்ற
பெருத்த கலவி இன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளுவதை விட்டு ஒழியேனோ?

ரிக் வேத மந்திரத்தை (வசிஷ்டர் முதலிய) ஏழு வகை
ரிஷிகளும் அறியும்படி உரைத்த சிறப்பு வாய்ந்தவனே, சரவணபவனே,
குகனே, இதம் தருவதும், இனிமை தருவதுமாய் விளங்கும் ஆறு முகங்கள்
கொண்ட அழகிய வேளே என்று,

இலக்கணங்கள் பொருந்த இயற்றமிழாலும் இசைத்
தமிழாலும் விரித்துரைக்கும் அழகிய பல மதுரம் மிகுந்த கவிகளாக
இயற்றப்பட்ட செந்தமிழை வகைவகையாக திருப்புயத்தில் பாமாலையாக
அணிந்தவனே,

களிப்புடன் பொன்னம்பலத்தின் மீது அசைந்து கூத்தாடும்
சங்கரரும், (தமக்கு) வழிவழி அடியவரான மாணிக்க வாசகருக்கு
(திருப் பெருந்துறையில். திருக்குருந்த மரத்தடியில் அருள் பெறும்
வண்ணம் அருள் செய்த குரு நாதரகிய சிவபெருமானது

திருக் குழுந்தை என்ற நிலையிலும் அந்த சிவபெருமானே
வழிபட்டு நிற்கும் பெரு நிலையிலும் எழுந்தருளியுள்ள பெரியோனே,
திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே, பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *