ஆன்மிகம்

திருப்புகழ் 16 பதித்த செஞ்சந்த (திருப்பரங்குன்றம்)

இப்பாடலில் முருகனின் அழகை வர்ணித்து பாடப்பட்ட நூல் ஆகும். இப்பாடலை படித்தால் நல்ல செய்தி வந்து சேரும்.

பாடல் வரிகள்:

பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
     பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்
          பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் …… தனபாரம்

படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்
     செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்
          பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் …… றிளைஞோர்கள்

துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்
     புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்
          துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் …… கொடியார்பால்

துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
     புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
          துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் …… றருள்வாயே

குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்
     கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்
          குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் …… கதிர்வேலா

குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்
     தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங்
          குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் …… குகுகூகூ

திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்
     பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்
          திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் …… கொலைவேடர்

தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்
     டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்
          திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் …… பெருமாளே.

சொல் விளக்கம்:

பதித்த செம் சந்தப் பொன் குட(ம்) நித்தம் பருத்து உயர்ந்து
அண்டத்தில் தலை முட்டும் பருப்பதம் தந்தச் செப்பு அவை
ஒக்கும் தன பாரம்
 … (மார்பில்) பதிந்துள்ள செவ்விய அழகிய
பொற்குடம், நாள் தோறும் பருத்து, உயர்ந்து விண்ணில் தலையை
முட்ட வல்ல மலை, (யானையின்) தந்தம், செப்பு ஆகியவைகளை
நிகர்க்கும் தன பாரங்கள்,

படப் புயங்கம் பல் கக்கு கடுப் பண் செருக்கு வண்டு அம்பு
அப்பில் கயல் ஒக்கும் பருத்த கண்
 … படத்தை உடைய பாம்பின்
பற்கள் கக்கும் விஷம், பண்களைக் களிப்பில் பாடும் வண்டு, அம்பு,
நீரில் உள்ள கயல் மீனை ஒக்கும் பெரிய கண்கள்,

கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள்
துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து
 … கூந்தலுக்கு
ஒப்பான இருட்டு என்றெல்லாம் இளைஞர்கள் (விலைமாதர்களின்)
அங்கங்களைத் துதித்து முன்னதாகக் கும்பிட்டு நடந்த
நிகழ்ச்சிகளை உள்ளவாறு அவர்களிடம் சொல்லி,

அன்பு உவக்க நெஞ்சு அஞ்சச் சிற்றிடை சுற்றும் துகில்
களைந்து இன்பத் து(ரு)க்கம் அளிக்கும் கொடியார் பால்
 …
அன்புக் களிப்புடன் உள்ளம் அஞ்ச, சிற்றிடையைச் சுற்றியுள்ள
ஆடையை விலக்கி இன்பக் கலக்கத்தைக் கொடுக்கும்
கொடியவர்களாகிய வேசிகளிடத்து

துவக்குணும் பங்கப் பித்தன் அவத்தன் புவிக்குள் என்
சிந்தைப் புத்தி மயக்கம் துறக்க
 … கட்டுப்பட்டிருக்கும்
பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய
மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க

நின் தண்டைப் பத்மம் எனக்கு என்று அருள்வாயே … உனது
தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்கு என்று
தந்து அருள்வாயோ?

குதித்து வெண் சங்கத்தைச் சுறவு எற்றும் கடல் கரந்து
அஞ்சிப் புக்க அரக்கன் குடல் சரிந்து எஞ்சக் குத்தி
விதிர்க்கும் கதிர் வேலா
 … குதித்து வெண்ணிறச் சங்குகளை
சுறா மீன்கள் மோதி எறியும் கடலில் ஒளிந்து பயந்துப் புகுந்த
அசுரன் சூரனின் குடல் சரிந்து விழும்படியாகக் குத்தி அசைக்கும்
ஒளி வீசும் வேலனே,

குலக் கரும்பின் சொல் தத்தை இபப் பெண் தனக்கு வஞ்சம்
சொல் பொச்சை இடை
 … சிறந்த கரும்பு போன்ற மொழியை
உடையவளும், கிளி போன்றவளுமாகிய, (ஐராவதம் என்ற) யானை
மகளான தேவயானையிடம் மறைத்த சொல்லுடன் காட்டில்,

குங்குகுக் குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ
திதித்திதித் திந்தித் தித்தெயெனக் கொம்பு அதிர்த்து வெண்
சண்டக் கட்கம் விதிர்த்து
 … குங்குகுக் குகுங் குங்குக் குக்குகு
குக்குங் குகுகூகூ திதித்திதித் திந்தித் தித்தெயென ஊதுக் கொம்புகள்
அதிர்ந்து ஒலி செய்ய பளபளக்கும் வலிமை பொருந்திய வாளை வீசி,

திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும் கொலை
வேடர் தினைப் புனம் சென்று இச்சித்த பெ(ண்)ணைக்
கண்டு
 … திரளாகக் குவியும்படி அந்த இடத்திலேயே (பகைவரை)
அழிவுற வெட்டும் கொடிய வேடர்களுடைய தினைப் புனத்துக்குப்
போய், விரும்பிய பெண்ணாகிய வள்ளியைப் பார்த்து,

உருக் கரந்து அங்குக் கிட்டி அணைந்து ஒள் திருப்பரங்
குன்றில் புக்கு உள் இருக்கும் பெருமாளே.
 … தன்
உண்மையான உருவத்தை மறைத்து, அங்கு நெருங்கிச் சென்று
அவளைத் தழுவி, பின்பு ஒளி வீசும் திருப்பரங்குன்றத்தைப் புக்கிடமாகக்
கொண்டு அங்கு வீற்றிருக்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *