ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 151 கொந்துத் தரு (பழநி)

பழனியில் குடி கொண்டிருக்கும் அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் எது? இப்பாடலை தினமும் படித்தால் தொழில் வளர்ச்சி உண்டாகும்.

கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
     விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ
          கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ …… விழிவேலோ

கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
     வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
          கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ …… எனுமாதர்

திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
     தந்தித் திரிகட கிடதா எனவே
          சிந்திப் படிபயில் நடமா டியபா …… விகள்பாலே

சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
     வந்தித் தருள்தரு மிருசே வடியே
          சிந்தித் திடமிகு மறையா கியசீ …… ரருள்வாயே

வெந்திப் புடன்வரு மவுணே சனையே
     துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
          வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே …… தவவாழ்வே

விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
     கஞ்சத் தயனுட னமரே சனுமே
          விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே …… லருள்கூர்வாய்

தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
     செங்கட் கருமுகில் மருகா குகனே
          சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் …… கதிர்காமா

சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்
     இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர்
          துங்கப் பழநியில் முருகா இமையோர் …… பெருமாளே.

மேலும் படிக்க :அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

……… சொல் விளக்கம் ………

கொந்துத் தரு குழல் இருளோ புயலோ … பூங்கொத்துக்கள்
உள்ள கூந்தல் இருட்டோ, மேகமோ?

விந்தைத் தரு நுதல் சிலையோ பிறையோ … விசித்திரமான
நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ?

கொஞ்சிப் பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ …
கொஞ்சிப் பேசும் பேச்சு அமுதமோ அல்லது பழமோ? கண்
வேலாயுதமோ?

கொங்கைக் குடம் இரு கரியோ கிரியோ … மார்பகங்களாகிய
குடங்கள் இரண்டு யானைகளோ, மலைகளோ?

வஞ்சிக் கொடி இடை துடியோ பிடியோ … வஞ்சிக் கொடி
போன்ற இடுப்பு உடுக்கையோ, ஒரு பிடியில் அடங்குவதோ?

கொங்கு உற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனு மாதர் …
வாசனை கொண்டு உயர்ந்த பெண்குறி பாம்போ, ரதமோ என்று
உவமை கூறத் தக்க விலைமாதர்கள்.

திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா
எனவே சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள் பால்
 …
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா என்ற
ஒலியுடன் சிந்து எனப்படும் இசைப் பாடல்களை இவ்வண்ணம்
பயின்று நடனம் செய்கின்ற பாவியர்களாகிய வேசியரிடத்தே

சிந்தைத் தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள்
தரும் இரு சேவடியே சிந்தித்திட மிகு மறையாகிய சீர்
அருள்வாய்
 … மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய
அடியேன் உன்னையே வணங்கி திருவருளைப் பாலிக்கும் உனது
இரண்டு திருவடிகளை தியானிக்க சிறந்த ரகசியமாகிய உபதேசப்
பொருளை அருள்வாயாக.

வெந்திப்புடன் வரும் அவுண ஈசனையே துண்டித்திடும்
ஒரு கதிர் வேல் உடையாய் வென்றிக்கு ஒரு மலை என
வாழ் மலையே தவ வாழ்வே
 … உடை வாள், அம்பராத்தூணி
முதலிய கட்டுக்களுடன் போருக்கு வந்த அசுரர் தலைவனாகிய
சூரபத்மனை வெட்டிய ஒப்பற்ற ஒளி வீசும் வேலை உடையவனே,
வெற்றிக்கு ஒரு மலை இவன் என்று சொல்லும்படி வாழ்கின்ற
ஞானமலையே, தவ சீலர்களுக்கு வாழ்வே,

விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து
அயனுடன் அமர ஈசனுமே விந்தைப் பணிவிடை புரி
போது அவர்மேல்அருள் கூர்வாய்
 … ஞான வித்தைக்கு
உரியவர்கள் தொழும்படி வருபவனே, தாமரை மலர் மீது உறையும்
பிரம தேவரும் இந்திரனும் அழகிய திருத் தொண்டுகள்
செய்யும்போது அவர்கள்பால் மிகுதியாக அருள் சுரப்பவனே,

தொந்திக் கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு
முகில் மருகா குகனே சொந்தக் குற மகள் கணவா திறல்
சேர் கதிர் காமா
 … தொந்தியை உடைய கணபதி மகிழும் தம்பியே,
சிவந்த கண்களை உடைய, மேகம் போன்ற கரிய, திருமாலின்
மருகனே, உனக்குச் சொந்தமான குறப் பெண் வள்ளியின்
கணவனே, திறமை வாய்ந்த கதிர் காமத்தில் உறைபவனே,

சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சித்
திரு மதிள் புடை சூழ் அருள் சேர் துங்கப் பழநியில்
முருகா இமையோர் பெருமாளே.
 … அழகு வாய்ந்த பல
வனங்கள் நிறைந்த, சோலைகள் சூழ்ந்துள்ள, கோட்டையும்
அழகிய மதில்களும் அருகில் சுற்றியிருந்து அருள் பாலிப்பதும்
பெருமை வாய்ந்ததுமான பழனி மலை மேல் வீற்றிருக்கும்
முருகனே, தேவர்களின் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *