ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 146 குருதி மலசலம் (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் தீராத பிரச்சனை நீங்கும்.

குருதி மலசல மொழுகு நரகுட
     லரிய புழுவது நெளியு முடல்மத
          குருபி நிணசதை விளையு முளைசளி …… யுடலூடே

குடிக ளெனபல குடிகை வலிகொடு
     குமர வலிதலை வயிறு வலியென
          கொடுமை யெனபிணி கலக மிடுமிதை …… யடல்பேணி

மருவி மதனனுள் கரிய புளகித
     மணிய சலபல கவடி மலர்புனை
          மதன கலைகொடு குவடு மலைதனில் …… மயலாகா

மனது துயரற வினைகள் சிதறிட
     மதன பிணியொடு கலைகள் சிதறிட
          மனது பதமுற வெனது தலைபத …… மருள்வாயே

நிருதர் பொடிபட அமரர் பதிபெற
     நிசித அரவளை முடிகள் சிதறிட
          நெறிய கிரிகட லெரிய வுருவிய …… கதிர்வேலா

நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
     நிருப குருபர குமர சரணென
          நெடிய முகிலுடல் கிழிய வருபரி …… மயிலோனே

பருதி மதிகனல் விழிய சிவனிட
     மருவு மொருமலை யரையர் திருமகள்
          படிவ முகிலென அரியி னிளையவ …… ளருள்பாலா

பரம கணபதி யயலின் மதகரி
     வடிவு கொடுவர விரவு குறமக
          ளபய மெனவணை பழநி மருவிய …… பெருமாளே.

மேலும் படிக்க : திருப்புகழ் சுவாமிமலை இருவினை பாடல் 205

……… சொல் விளக்கம் ………

குருதி மலசல மொழுகு நரகுடல் … ரத்தம், மலம், நீர், இவை
ஒழுகுகின்ற மனிதக் குடலையும்,

அரிய புழுவது நெளியு முடல் … சிறிய புழுக்கள் நெளியக்கூடிய
உடலையும் கொண்டு,

மத குருபி … மதம் கொண்ட விகார வடிவம் கொண்டவனாய்,

நிணசதை விளையும் உளைசளி யுடலூடே … கொழுப்பு, சதை,
ஊறி எழும் சேறு போன்ற சளி இவை உடலினுள்ளே

குடிகளெனபல குடிகை … குடியிருப்பவர்கள் போல உரிமையுடன்
பலவும் குடிகொண்டு,

வலி கொடுகுமர வலிதலை வயிறு வலியென … வலியதான
கண்ட வலி (ஒருவகை வலிப்பு நோய்), தலைவலி, வயிற்றுவலி என்று

கொடுமை யெனபிணி கலக மிடுமிதை … கொடுமையான
நோய்கள் செய்யும் வேதனை மிகுந்த இந்த உடலை,

அடல்பேணி மருவி மதனனுள் கரிய … மிகவும் விரும்பிய யான்,
மாதருடன் கலந்து, பொறாமையால் மன்மதனின் உள்ளமும் கரிந்து
போகும்படியாக,

புளகித மணி அசல பல கவடி மலர்புனை … புளகாங்கிதமும்,
மணிகளும் பூண்ட, மலை போன்ற, பல நகைகளை அணிந்த,
மலர்களைப் புனைந்த,

மதன கலைகொடு குவடு மலைதனில் மயலாகா … மதன
நூல்களில் கூறியபடி, பெருமலையன்ன மார்பகங்களில் மயக்கம்
கொள்ளாமல்,

மனது துயரற வினைகள் சிதறிட … மனத்தின் துன்பங்கள்
ஒழியவும், வினைகள் சிதறிப் போகவும்,

மதன பிணியொடு கலைகள் சிதறிட … காமநோயும் காம
சாஸ்திரமும் விலகி நீங்கவும்,

மனது பதமுற வெனது தலைபதம் அருள்வாயே … என் மனம்
பக்குவப்படவும், எனது தலையில் உனது திருவடிகளைச் சூட்டி
அருள்வாயாக.

நிருதர் பொடிபட அமரர் பதிபெற … அசுரர்கள் அழிந்து
பொடியாகுமாறும், தேவர்கள் தங்கள் அமராவதிப் பதியைப் பெறுமாறும்,

நிசித அரவளை முடிகள் சிதறிட … கூர்மையான நாகாஸ்திரம்,
சக்ராயுதம் என்ற பாணங்களின் நுனிகள் சிதறுமாறும்,

நெறிய கிரிகட லெரிய … மலைகள் நெறிந்து பொடிபடவும்,
கடல்கள் தீப்பற்றி எரியவும்,

உருவிய கதிர்வேலா … செலுத்திய ஒளிமிகுந்த வேலாயுதத்தை
உடையவனே,

நிறைய மலர்பொழி யமரர் முநிவரும் … நிரம்பவும் மலர்களைப்
பொழிந்து தேவர்களும் முநிவர்களும்,

நிருப குருபர குமர சரணென … அரசனே, குருநாதனே, குமரனே,
சரணம் என்று பணிய,

நெடிய முகிலுடல் கிழிய வருபரி மயிலோனே … பெரிய
மேகத்தின் உடலைக் கிழித்துக் கொண்டு ஊடுருவி வருகின்ற
மயிலை வாகனமாகக் கொண்டவனே,

பருதி மதிகனல் விழிய சிவனிடம் மருவும் … சூரியன், சந்திரன்,
அக்கினி இவற்றை விழியாகக் கொண்ட சிவபிரானின் இடப்பக்கத்தில்
இருப்பவளும்,

ஒருமலை யரையர் திருமகள் … ஒப்பற்ற மலையரசனான
ஹிமவானின் திருமகளாக வந்தவளும்,

படிவ முகிலென அரியினிளையவள் அருள்பாலா … தன்
வடிவம் மேகம்போல் கருத்த திருமாலின் தங்கையானவளுமான
பார்வதி தேவி அருளிய குழந்தையே,

பரம கணபதி யயலின் மதகரி வடிவு கொடுவர … பரம்
பொருளாகிய கணபதி அருகில் மதயானை உருவம் எடுத்து வர,

விரவு குறமகள் அபய மெனஅணை … உடனிருந்த குறமகள்
வள்ளி அபயம் என அடைக்கலம் புகுந்து தழுவ,

பழநி மருவிய பெருமாளே. … பழநியில் வசிக்கின்ற பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *