ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 127 கடலை பொரியவரை (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் தொழில் முன்னேற்றம் அடையும்.

கடலை பொரியவரை பலக னிகழைநுகர்
     கடின குடவுதர …… விபரீத

கரட தடமுமத நளின சிறுநயன
     கரிணி முகவரது …… துணைவோனே

வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
     வலம்வ ருமரகத …… மயில்வீரா

மகப திதருசுதை குறமி னொடிருவரு
     மருவு சரசவித …… மணவாளா

அடல சுரர்கள்குல முழுது மடியவுய
     ரமரர் சிறையைவிட …… எழில்மீறும்

அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
     மரக ரசரவண …… பவலோலா

படல வுடுபதியை யிதழி யணிசடில
     பசுப திவரநதி …… அழகான

பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
     பழநி மலையில்வரு …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

கடலை பொரியவரை பலகனி கழை … கடலை, பொரி, அவரை,
பலவிதமான பழங்கள், கரும்பு

நுகர் கடின குட உதர … இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம்
போன்ற வயிற்றையும்,

விபரீத கரட தட மு(ம்)மத … அதிசயமான மதம் பாய்ந்த
அடையாளத்தையும், மும்மதத்தையும்*

நளின சிறுநயன … தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும்
கொண்ட

கரிணி முகவரது துணைவோனே … யானைமுகத்தோருக்கு
இளையவனே,

வடவரையின் முகடு அதிர … வடமலையாகிய மகாமேருவின்
சிகரங்களும் அதிரும்படி,

ஒருநொடியில் வலம்வரு மரகத மயில்வீரா … ஒரே நொடியில்
உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே,

மகபதி தருசுதை குறமினொடு … தேவேந்திரனின் திருமகள்
தேவயானையுடனும், குறமகள் வள்ளியுடனும்,

இருவரு மருவு சரசவித மணவாளா … இருவரையும் ஒருங்கே
தழுவி இன்ப ஆடல் புரியும் கணவனே,

அடல் அசுரர்கள்குல முழுது மடிய … வலிமை பொருந்திய
அசுரர்களின் குலம் முழுவதும் அழியுமாறும்,

உயர்அமரர் சிறையைவிட … உயர்ந்த தேவர்களின் சிறை நீங்கவும்,

எழில்மீறும் அருண கிரணவொளி யொளிரும் அயிலை …
அழகு மிகுந்த சிவந்த கதிரொளியை வீசும் வேலை

விடும் அரகர சரவண பவலோலா … செலுத்திய ஹரஹர
சரவணபவனே, திருவிளையாடல் புரிபவனே,

படல வுடுபதியை … கூட்டமாக உள்ள நக்ஷத்திரங்களின்
தலைவனாம் சந்திரனையும்

இதழி யணிசடில … கொன்றைமலரையும் தரித்திருக்கின்ற
ஜடாமுடியுடைய

பசுபதி வரநதி … பசுபதியாகிய சிவபெருமானும், ஜீவநதியாகிய
கங்காதேவியும்,

அழகான பழ நிமலை அருள்செய … அழகிய பழமையான
நிர்மலையாகிய உமாதேவியும் பெற்றருளிய

மழலை மொழிமதலை … மழலைச் சொல் பேசும் குழந்தையே,

பழநி மலையில்வரு பெருமாளே. … பழநி மலையில்
எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *