ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 116 இரவி என (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் மனதிற்கு பிடித்த மனைவி அமையும்.

இரவியென வடவையென ஆலால விடமதென
     உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
          இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி …… லதுகூவ

எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
     யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
          இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு …… வசைபேச

அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
     அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
          அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக …… மெலிவானாள்

அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
     அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை
          யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை …… வருவாயே

நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
     பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
          நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் …… மருகோனே

நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
     கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
          நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை …… யருள்பாலா

பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
     படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
          பதுமகர தலமுருக நால்வேத கரரணிக …… மயில்வீரா

பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
     வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
          பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

இரவி என வடவை என ஆலால விடம் அது என … சூரியன்
என்று கூறும்படியும், வடவைமுகாத் தீ என்று சொல்லும்படியும், ஆலகால
விஷம் என்று சொல்லும்படியும்

உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர … கொடிய
வடிவை எடுத்துக் கொண்டு, ஆகாயத்தின் மேலே செல்லும் சந்திரனும் வர,

இரதி பதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ …
ரதி தேவியின் கணவனாகிய மன்மதன் முதல் நாலு மலர்ப்பாணங்களைச்
செலுத்த, அவனது வெற்றிச் சின்னமான (எக்காளமாகிய) குயில் கூவ,

எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி
இசை குறுகி இரு செவியில் நாராசம் உறுவது என இகல்
புரிய
 … ஏழு கடலாகிய, அவனுடைய முரச வாத்தியத்தின் இசையும்,
புல்லாங் குழலின் ஓசையும், மாடுகளின் கழுத்தில் உள்ள மணிகளின்
ஓசையும் நெருங்கி வந்து அம்பு வந்து பாய்வது போல இரு செவிகளிலும்
பாய்ந்து போராடவும்,

மதன குரு ஓராத அ(ன்)னையர் கொடு வசை பேச … காம
வேதனையைப் புரிந்து கொள்ளாத தாய்மார்கள் கொடிய வசை
மொழிகளைப் பேசி நகையாடவும்,

அரஹர என வநிதை படு பாடு ஓத அரிது அரிது … அரகர
என்று இப்பெண் படுகின்ற துன்பத்தை அளவிட்டுச் சொல்லுவது
மிக மிகக் கடினம்.

அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் …
அமுதமும் மயிலும் போன்று எப்போதும் இருக்கும் என் மகள் இந்த நிலை
எல்லாம் கருதி எல்லோரிடமும் பகைமைப் போர் செய்கின்றாள்.

அவசம் உற அவசம் உற ஆர் ஓமல் தரவும் மிக மெலிவு
ஆனாள்
 … மிகவும் மயக்கம் ஏற்பட்டு, நிறைய ஊர்வம்புகள் பிறக்கவும்,
மிகவும் மெலிந்து போனாள்.

அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது
அடிமை கொள உனது பரம்
 … இப்பெண் திக்கற்றவள். இவள்
தலை விதி இங்ஙனம் இருந்த போதிலும் உன்னை விட்டு நீங்குதல்
என்பது முடியாது. இவளை அடிமை கொள்ளுவது உன்னுடைய
பொறுப்பேயாகும்.

ஆறாத ஒரு தனிமை அவளை அணை தர இனிதின்
ஓகார பரியின் மிசை வருவாயே
 … காதல் தணியாத, தன்னந்
தனியளாகிய அந்தப் பெண்ணை அணைந்து ஆட்கொள்ளுமாறு,
இனிமையுடன் ஓங்கார வடிவத்தோடு கூடிய மயிலின் மேல்
(முருகா) நீ வந்து அருளுக.

நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு
சகடு உதை அது செய்து
 … மலையில் பசுக் கூட்டங்கள் எல்லாம்
துதி செய்து தம்மைச் சூழந்து வர, ஒப்பற்ற மருத மரத்தையும், போர்
புரிந்து கொல்வதற்காக வண்டி உருவமாய் வந்த சகடாசுரனையும்
உதைத்துக் கொன்று,

ஆ மாய மழை சொரிதல் நிலை குலைய மலை
குடையதாவே கொள் கரகமலன் மருகோனே
 … பசுக்கள்
அழியுமாறு மழை பெய்வது தடைபட, கோவர்த்தன மலையைக்
குடையாகப் பிடித்த, தாமரை போன்ற கரங்களை உடைய
கோபாலனின் மருகனே,

நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி … மாசு
இல்லாதவளும், மூன்று கண்களை உடையவளும், ஒளி வீச
எழுந்தருளும் குமரி,

கவுரி பயிரவி அரவ பூணாரி திரி புவனி … கெளரி, காளி,
பாம்பை அணி கலனாகப் பூண்டுள்ளவள், மூன்று உலகங்களுக்கும்
தலைவி,

நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை
அருள்பாலா
 … நெருக்கமாக உள்ள இமய மலை அரசன் வளர்த்தருளிய
மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமா தேவி பெற்ற மகனே,

பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடு பொடி பட
அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத
 … கடலும், மலையும்,
அசுரர் கூட்டமாகிய பெரிய படையும் தவிடு பொடியாகவும், தேவர்கள்
துன்பம் நீங்கவும், வேலாயுதத்தைச் செலுத்திச் சண்டை செய்த

பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில்வீரா …
தாமரை மலர் போன்ற திருக் கரங்களை உடையவனே, முருகனே,
நான்கு வேதங்களிலும் வல்ல ஞான ஒளியினருக்கு அணிகலமாக
விளங்குபவனே, மயில் வீரனே,

பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குற
மகள் மகிழும் லீலா
 … பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம்
இவைகளின் கலவைச் சேறு நிரம்பி வளர்கின்ற மார்பகங்களை
உடைய மங்கை, குறப் பெண்ணாகிய வள்ளி மகிழும் இன்பத்
திருவிளையாடல்களைச் செய்தவனே,

விதுர மதுர பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர்
பெருமாளே.
 … வாக்கு வல்லமை நிறைந்த, சுவை நிரம்பிய நூலாகிய
தேவாரத்தை (திருஞான சம்பந்தராக வந்து) உலகுக்குத்
தந்தருளியவனே, பழனிப் பதியில் எழுந்தருளியுள்ள
கோலாகலமானவனே, தேவர்களின் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *