ஜோதிடம்பஞ்சாங்கம்

திருப்புகழ் 110 அவனிதனிலே (பழநி)

பழநியில் குடிகொண்டிருக்கும் அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் சொத்து பிரச்சினைகள் நீங்கும்.

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து …… இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து …… பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து …… துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற …… னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த …… மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க …… வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த …… கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

அவனிதனிலே பிறந்து … இந்த பூமியிலே பிறந்து

மதலை எனவே தவழ்ந்து … குழந்தை எனத் தவழ்ந்து

அழகு பெறவே நடந்து … அழகு பெறும் வகையில் நடை பழகி

இளைஞோனாய் … இளைஞனாய்

அருமழலையே மிகுந்து … அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர

குதலை மொழியே புகன்று … குதலை மொழிகளே பேசி

அதிவிதம் அதாய் வளர்ந்து … அதிக விதமாக வயதுக்கு ஒப்ப
வளர்ந்து

பதினாறாய் … வயதும் பதினாறு ஆகி,

சிவகலைகள் ஆகமங்கள் … சைவ நூல்கள், சிவ ஆகமங்கள்,

மிகவுமறை ஓதும் அன்பர் … மிக்க வேதங்களை ஓதும்
அன்பர்களுடைய

திருவடிகளே நினைந்து துதியாமல் … திருவடிகளையே நினைந்து
துதிக்காமல்,

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி … மாதர்களின் மீது ஆசை மிகுந்து

வெகுகவலை யாய்உழன்று … அதன் காரணமாக மிக்க கவலையுடன்
அலைந்து

திரியும் அடியேனை … திரிகின்ற அடியேனை,

உன்றன் அடிசேராய் … உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா?

மவுன உபதேச சம்பு … சும்மா இரு என்ற மெளன உபதேசம்
செய்த சம்பு,

மதியறுகு வேணி தும்பை … பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை,
தும்பைப்பூ

மணிமுடியின் மீதணிந்த மகதேவர் … தன் மணி முடியின்
மேலணிந்த மகாதேவர்,

மனமகிழவே அணைந்து … மனமகிழும்படி அவரை
அணைத்துக்கொண்டு

ஒருபுறமதாகவந்த … அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த

மலைமகள் குமார … பார்வதியின் குமாரனே

துங்க வடிவேலா … பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை
உடையவனே

பவனி வரவே உகந்து … இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு

மயிலின் மிசையே திகழ்ந்து … மயிலின் மேல் ஏறி விளங்கி

படி அதிரவே நடந்த … பூமி அதிரவே வலம் வந்த

கழல்வீரா … வீரக் கழல் அணிந்த வீரனே

பரம பதமே செறிந்த … மோட்ச வீட்டில் பொருந்தி நின்று

முருகன் எனவே உகந்து … முருகன் என விளங்கி

பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. … பழனிமலையில்
வீற்ற பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *