ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 106 அதல விதல (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் இது இப்பாடலை தினமும் படித்தால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

அதல விதலமுத லந்தத்த லங்களென
     அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
          அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென …… அங்கிபாநு

அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
     அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
          அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு …… சம்ப்ரதாயம்

உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
     ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
          லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை …… வந்துநீமுன்

உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
     மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
          உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை …… நம்புவேனோ

ததத ததததத தந்தத்த தந்ததத
     திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
          தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு …… திந்திதோதி

சகக சககெணக தந்தத்த குங்கெணக
     டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
          தகக தகதகக தந்தத்த தந்தகக …… என்றுதாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
     அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
          பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண …… துங்ககாளி

பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
     கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
          பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் …… தம்பிரானே.

……… சொல் விளக்கம் ………

அதலம் விதலம் முதல் அந்தத் தலங்கள் என … அதலம் விதலம்
முதலான அந்தக் கீழ்* ஏழு உலகங்கள் எனவும்,

அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என … இப்பூமி
எனவும், தேவர்களின் அண்டங்களான மேல்* ஏழு உலகங்கள் எனவும்,

அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என … சகல கடல்கள்
எனவும், எட்டுத் திசைகளிலுள்ள மலைகள் எனவும்,

அங்கி பாநு அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என …
அக்கினி, சூரியன், குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் (என்னும்
முச்சுடர்கள்) எனவும், ஒன்றோடு ஒன்று சந்தித்து ஒற்றுமைப்பட்ட
மந்திரங்கள் எனவும்,

அறையும் மறை என அரும் தத்துவங்கள் என … சிறப்பாக
ஓதுகின்ற வேதம் எனவும், அருமையாகச் சொல்லப்படும் (96) தத்துவப்
பொருள்கள்** எனவும்,

அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் …
அணுவுக்குள் அணு எனவும், இங்ஙனம் எங்கும் நிறை பொருளாய்
நின்றுள்ள ஒரு பேருண்மை,

உதயம் எழ இருள் விடிந்து அக்கணம் தனில் … எனது உள்ளத்தில்
தோன்றி விளங்கவும், அஞ்ஞானம் என்ற இருள் ஒழிந்து அந்தக் கணமே

இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து உணர்வில் உணரும்
அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் உதவ
 …
இதயத் தாமரை எனப்படும் மொட்டு அங்கே கட்டு நீங்கி, உணர்விலே
உணரப்படும்படியான அநுபவ ஞானத்தை நான் பெற்றிடும் வகையை
நீ முன்பு வந்து உதவி அருள,

இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என … இடைவிடாத
அன்பால் அருமையான இனிய சொற்களால் ஆன நூலாக,

மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் உரிய … இசை வடிவப்
பாக்களாகிய மதுர கவிகளில் மனம் ஆசை வைத்துத் திருப்புகழ்
என்னும் சந்தப் பாவால் பாடும் உரிமைப் பாக்கியத்தைப் பெற்ற

அடிமை உனை அன்றிப் ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ …
அடிமையாகிய நான் உன்னை அல்லால் இவ்வுலக வாழ்வினை
நம்ப மாட்டேன்.

ததத ததததத தந்தத்த தந்ததத
 திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
  தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி
   சகக சககெணக தந்தத்த குங்கெணக
    டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
     தகக தகதகக தந்தத்த தந்தகக என்றுதாளம்
 … என்ற
சந்தத்துக்கேற்ற தாளத்தில்

பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக … பதலை திமிலை
முதலிய பறைகள், தம்பட்டம் இவை ஒலிகளை எழுப்ப,

அகில நிசிசரர் நடுங்கக் கொடும் கழுகு பரிய குடர் பழு
எலும்பைப் பிடுங்க
 … எவ்விடத்திலும் உள்ள அசுரர்கள் நடுக்கம்
கொள்ள, கொடிய கழுகுகள் (பிணங்களின்) பருத்த குடல்களையும்
விலா எலும்புகளையும் பிடுங்க,

ரண துங்க காளி பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி
இட
 … போர்க்களத்து வெற்றிக் காளி களி நடனம் புரிய, நரிகள்
ஊளையிட, பருந்துகளின் சிறகுகள் சாமரம் வீச,

இகலை வென்று சிகண்டி தனில் பழநி மலையின் மிசை
வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே.
 … போரை வென்று
மயிலின் மேல் பழனி மலை மீது வந்து அமர்ந்துள்ள, தேவர்களின்
பெருமாளே.

மேலும் படிக்க : செவ்வாய்கிழமையும் கிருத்திகை விரதமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *