ஆன்மிகம்ஆலோசனை

ஒன்பது வாரம் தொடர்ந்து வழிபட்டு வருவதால் அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.

ராகுகால பூஜை எப்படி வழிபடலாம். கிரகங்களில் பாவ கிரகங்கள் என்பது ராகு, கேதுவை குறிக்கும். இவர்கள் நம் நிழல். நாம் நல்லது செய்தால் நல்லதையும், நாம் கெடுதல் நினைத்தால் கெடுதலையும், கொடுக்கக் கூடியவர்கள். அதனால் இவர்களை நினைத்து பயப்பட வேண்டாம். போதாத காலமாக இருக்கும் பொழுது தொடர்ந்து வழிபட்டு வருவதால், நமக்கு வரக்கூடிய ஆபத்தை குறைக்கும்.

துர்க்கையை வழிபாடு செய்வதால்

ராகு காலத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வருகின்ற ராகு காலத்தில், துர்க்கையை வழிபாடு செய்வதால், கல்யாணத்தடை, குழந்தையின்மை, போன்ற தடைகள் இன்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். உங்கள் வீட்டில் அருகாமையில் இருக்கும் துர்க்கைக்கு இந்த ராகு நேரத்தில் எலுமிச்சை விளக்கு நெய்விட்டு ஏற்ற வேண்டும். இதனால் ராகுவினால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. அதனால் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துவிட வேண்டும். செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் காலை ஒரு வேளை மட்டும் உணவு இன்றி பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். பால் அருந்தலாம். ஒருவேளை விரதமிருந்து அன்று ராகு நேரத்தில் துர்க்கையை வழிபடுவதால் மேலும் பலன்கள் கிடைக்கும்.

ஒன்பது வாரங்கள்

தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வந்தால் குடும்பத்தில் சந்தோசம் நிலைத்திருக்கும். வீட்டிலும் அந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. துர்க்கைக்கு விருப்பமான அரளி மாலை, மல்லிகைப்பூ சாற்றி வழிபடுவது நல்லது. உங்களால் முடிந்த பிரசாதங்களை வைத்து வழிபடலாம். சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு பொங்கல், வெண் பொங்கல், பச்சைப்பயறு, கேசரி போன்ற இனிப்பு பதார்த்தங்களை வைத்து வழிபடுவது சாலச் சிறந்தது.

உங்கள் வேண்டுதல்களை வைத்தால் அது விரைவில் நிறைவேறும். ஒவ்வொரு வாரமும் நம்பிக்கையுடன் மனமுருகி துர்க்கையை வழிபட்டு வருவதால் உங்கள் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெற்று வாழலாம். ராகு காலத்தில் நடக்கக்கூடிய பூஜைகளில் நீங்களும் கலந்துகொள்ளலாம். அபிஷேகத்திற்கு உரிய சாமான்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொடுங்கள். இதுவும் தானத்திற்கு சமமானது.

மஞ்சள், திருநீரு, பால், தயிர், இளநீர், எலுமிச்சை பழங்கள், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், குங்குமம், தேன் போன்ற பொருட்களை உங்கள் சக்திக்கு ஏற்ப என்ன முடிகிறதோ அதை வாங்கிக் கொடுக்கலாம். இந்த ஒன்பது வாரம் தொடர்ந்து தவறாமல் துர்க்கை பூஜையில் கலந்து கொள்ளலாம். பெண்களுக்கு ஏற்படும் தீட்டு காலங்களை தவிர்த்து மற்ற வாரம் தொடர்ந்து ஒன்பது வாரமாக கணக்கு எடுத்துக்கொள்ளலாம்.

முதல் வாரம் தொடங்கும்போது தொடர்ந்து ஒன்பது வாரம் கும்பிடுவதற்கு அருள்புரிய வேண்டும் தாயே என்று வேண்டிக் கொள்ளுங்கள். இதனால் எந்த தங்கு தடையும் இன்றி தொடர்ந்து கும்பிடும் பாக்கியத்தை துர்க்கை வழங்குவாள். உங்களுக்கு என்ன கஷ்டங்கள் இருக்கிறதோ அதை வேண்டிக் கொண்டு அதைப் போக்கவேண்டும் என்று வேண்டுதல் வைத்து, ஒன்பது வாரம் தொடர்ந்து வழிபட்டு வருவதால் அனைத்து கஷ்டங்களும் நீங்கும். ஒவ்வொரு பெண்களும் கடைபிடித்தாலே குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை, பிள்ளைகள் படிப்பு, வேலைவாய்ப்பு, போன்ற பிரச்சனைகள் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *